திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி!!

0
40

 

திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி…

 

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று ஆவேசமாக சுற்றி வருகின்றது. இதையடுத்து மலைப்பாதை வழியாக திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் விதித்துள்ளது.

 

திருப்பதி மலைப்பாதையில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்றது. சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை சிறுமியை கடித்து கொன்றது. இந்த சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த சிறுத்தை திருப்பதி மலைப் பாதையில் ஆவேசமாக சுற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இதையடுத்து நேற்று(ஆகஸ்ட்12) திருப்பதி மலைப் பாதையின் 38வது வளைவில் சிறுத்தை நடமாடிக் கொண்டிருப்பதை வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தையை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுமியை சிறுத்தை அடித்து கொண்றது தொடர்பாக நேற்று(ஆகஸ்ட்12) திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தர்மா ரெட்டி அவர்கள் “சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அலிப்பிரி நடைபாதை, ஸ்ரீவாரி மெட்டு நடைப்பாதை ஆகிய இரண்டு நடைபாதைகளிலும் 40 அடிக்கு ஒரு பாதுகாவலர் என்று 100 காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் நடைபாதையில் 500 கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படவுள்ளது. மற்றும் ட்ரோன் கேமரா மூலமாக நடைபாதையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கபடவுள்ளது.

 

காளிகோபுரம் தொடக்கத்தில் இருந்து நரசிம்ம கோவில் முடியும் வரை 2 மீட்டருக்கு ஒரு காவலர் நிறுத்தப்பட உள்ளனர். திருப்பதிக்கு நடைபாதையில் செல்லும் பக்தர்கள் அனைவரும் இனிமேல் தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாவலர்கள் முன்பாக குழுவாக தான் செல்ல வேண்டும். சிறு குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தங்களது குழந்தைகளை அவர்களுடன் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும்.

 

குழுக்களாக வரும் பக்தர்கள் சாமி பாடல்களை பாடி வரவேண்டும். கோவிந்தா கோவிந்தா என்று சத்தமாக கூறிக்கொண்டும் வரவேண்டும். இவ்வாறு சத்தமாக கூறிக் கொண்டு வரும்போது வனவிலங்குகள் நடைபாதையில் நடமாடுவதை தடுக்க முடியும்.

 

அலிப்பிரி மலைப்பாதையில் மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை மணி வரை பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைபாதைகளில் வனவிலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழு அறிக்கை சமர்பித்தவுடன் நடைபாதையில் கம்பி வேலி அமைக்கப்படும்.

 

சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், வனத்துறை சார்பாக 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்” என்று பேட்டி அளித்தார்.