‘விருமன் ஆடியோ வெளியீட்டுக்கு என்னை அழைக்கவில்லை’… பாட்டெழுதிய சினேகன் ஆதங்கம்

0
173

‘விருமன் ஆடியோ வெளியீட்டுக்கு என்னை அழைக்கவில்லை’… பாட்டெழுதிய சினேகன் ஆதங்கம்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்தது. வெளிநாட்டுக்கு இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவர், சூர்யா, கார்த்தி, அதிதி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்று படத்தின் டிரைலரும் வெளியானது.

 இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் தற்போது கவனம் பெற்று வருகின்றன. அதில் வானம் கிடுகிடுங்க என்ற பாடலும் ஒன்று. அந்த பாடலை பாடல் ஆசிரியர் சினேகன் எழுதி இருந்தார். ஆனால் தனக்கு ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கூட வரவில்லை என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் கூடியவிரைவில் ‘பாடல் ஆசிரியர் என்ற இனமே இல்லாமல் அழிந்துவிடும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பாடல் ஆசிரியராக பல ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் கூட அனைத்து பாடல்களையும் சினேகன் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.