மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

0
154
#image_title

மீத்தேன் திட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது மாநில வருவாய் உயரும் என்ற ஒரு காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது.மீத்தேன் திட்டத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி யாருடைய ஆட்சியில் வழங்கப்பட்டது? நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

திமுகவின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவும் அதனுடைய தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

நானும் டெல்டாகாரன் தான் என உணர்வுபூர்வமாக தெரிவித்து இருந்தது அவருக்கான ஆதரவாகி விடக்கூடாது என்பதற்காக போகிற போக்கில் புழுதியை வாரி தூற்றிவிட்டு சென்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது மாநில வருவாய் உயரும் என்ற ஒரு காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தின் காரணமாக எழக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அப்படி சுற்றுச்சூழல் ஆய்வு என்பது பாதிக்கப்படக்கூடிய விளைவுகள் இருக்கும் என்றால் அவருடைய நிலங்கள் பாதிப்படையும் என்று சொன்னால் அந்தத் திட்டத்தை தொடராது.

தஞ்சை மாவட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய டெல்டா பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகளின் எதிர்ப்பினை அன்றைக்கே தெரிவித்திருந்தார்கள்.

மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தோம். நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அப்படி எதிர்ப்பு வருகின்ற போது கூட அதிமுக அரசு விவசாயிகள் மீது ஏவிவிட்ட அடக்கு முறை, கைது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தியது போன்று திமுக ஈடுபடாமல் என்றார்.

மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்பு இல்லாமல் விவசாயிகளுடைய குரலுக்கு செவி சாய்க்கும் அரசாக இருந்தது. மக்களுக்கு பாதிப்பு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீத்தேன் திட்டத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டமத்திற்கும் அனுமதி யாருடைய ஆட்சியில் வழங்கப்பட்டது?

தன்னை ஒரு விவசாயி என ஊர் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க கூடியவரின் அதிமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பிலிருந்த காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது.

தான் மீது வந்திருக்கக்கூடிய குற்றச்சாட்டுக்கு, தான் தவறு செய்தவர் பிறரை நம்ப மாட்டார் என்ற அடிப்படையில், எல்லா தவறுகளையும் தாங்கள் செய்துவிட்டு அதை மூடி மறைக்கக்கூடிய வகையில் திமுகவின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவும் அதனுடைய தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.