பெண்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுமா? பொதுப்பணித் துறை அமைச்சர் வெளியிட்ட ருசிகர தகவல்!

0
102

திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி நிச்சயமாக தமிழகத்தில் இருக்கின்ற பெண்கள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு தெரிவித்திருக்கின்றார். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஆய்வுக் கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்ற ஒரு பங்கேற்றார்கள்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்துவதற்கு சட்டசபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வருடத்திற்கு 2000 கிலோ மீட்டர் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

நில எடுப்பு பணிகள் காரணமாக, நெடுஞ்சாலைகள் போடும் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. நில எடுப்பு பணியினை விரிவுபடுத்த ஐந்து மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமனம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். முதலமைச்சரின் உத்தரவின்படி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களில் மரங்கள் நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல் உள்ளிட்ட சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொடைக்கானல்-மூணாறு இடையே சாலைகள் அமைக்க கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. தமிழர்களின் அடையாளமாக திகழும் கீழடியில் கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இருந்தாலும் அங்கே செல்வதற்கு சாலை வசதி கிடையாது என்ற காரணத்தால், விரைவில் சாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இருக்கின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற பகுதிகளில் புறவழிச் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

சென்ற பத்து வருட காலமாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பாலம் கட்டப்படவில்லை. மதுரையில் புதிதாக 3 புதிய பாலங்கள் கட்ட தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. நூலக இடம் தேர்வு தொடர்பாக முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு அவரிடம் அனுமதி பெறப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும். கிழக்கு கடற்கரை சாலை பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது ஒற்றை முறை டெண்டர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய கட்சி 5 ஆண்டுகாலம் ஆட்சி புரிவதற்கு பொதுமக்கள் அனைவரும் வாக்களித்து எங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஐந்தாண்டு கால கட்டத்திற்குள் நிதி நிலையைப் உட்பட அனைத்து துறைகளையும் நாங்கள் சீர்படுத்துவோம். தேர்தல் வாக்குறுதிகள் சொல்லாததையும் நிறைவேற்றி வருகின்றோம் இதன் காரணமாக, சொல்வதை தான் செய்வோம் செய்வதை தான் சொல்வோம் ஆனால் கட்டாயம் செய்வோம் கட்டாயம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.