திரையரங்குகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

0
72

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த கட்ட ஊரடங்கு  அமல்படுத்தப்பட உள்ளது. இந்த அன்லாக் 5- ல் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு அறிவிக்கவில்லை.

ஏற்கனவே படுமோசமான வீழ்ச்சியை கண்டுள்ள திரையரங்கு துறை இந்த அறிவிப்பை கேட்டதும் பெரும் அதிருப்தியை அடைந்தனர். திரையரங்கு உரிமையாளர்கள் இந்த அறிவிப்பைக் கேட்ட பின்பு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஆனால் நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் அக்டோபர் 15ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்காத நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் திறக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் அறிக்கை ஒன்றை கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில்,’திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி இந்த அறிவிப்பு தமிழகத்தில் செயல்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

author avatar
Parthipan K