மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜக அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மதுரையை தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?
திமுக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து, 2026 தேர்தலையும் நன்கு எதிர்கொள்வதற்காக திமுக மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. இதே பாதையில் பாஜகவும் நகர்ந்து, மதுரையையே முருக பக்தர்கள் மாநாட்டுக்கான இடமாக தேர்ந்தெடுத்துள்ளது.
வாக்கு வங்கி அரசியலா?
2021 தேர்தலில் மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அனுபவத்தை கொண்டு, தற்போது பாஜக தென்மாவட்டங்களில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளை பெற்று வலுவடைய முயற்சி செய்கிறது என்று கூறப்படுகிறது.
“இது பக்திப் மாநாடா , வாக்கு வங்கிக்கான மாநாடா?”
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதற்க்கு பதிலளித்து, “முருக பக்தர்கள் மாநாடு அரசியலோடு சம்பந்தம் இல்லாதது. இது பக்தி சார்ந்த நிகழ்ச்சி மட்டும் தான்” என விளக்கம் அளித்தாலும், அரசியல் விமர்சகர்கள் இந்து முன்னணி நடத்தும் இந்த மாநாட்டில் பாஜகவின் முழுமையான ஈடுபாடு இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்பரங்குன்றத்தை விட நிழல் கூட்டமா?
எதிர்க்கட்சி தரப்பில் இருந்து, “மதுரையில் நடக்கும் இந்த மாநாடு உண்மையான முருக பக்தர்களின் மாநாடு அல்ல. திருப்பரங்குன்றத்தில் நடந்ததே உண்மை மாநாடு” என கூறப்படுகிறது. இதில் பாஜக, அதிமுக, தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என அனைவரும் சந்திக்காத படி, பாஜக தனியாக பக்தி மூலமாக வாக்கு சேகரிக்க முயலுகிறது என கூறப்படுகிறது.
முருக பக்தர்களின் பெயரில் நடத்தப்படும் இந்த மாநாடு, உண்மையான பக்திக்கா அல்லது அரசியல் நாடகமா என்பதை விரைவில் மக்கள் தீர்மானிக்க போகிறார்கள். ஆனாலும், பாஜக தென்மாவட்டங்களில் வேரூன்றுவதற்காக முருகனின் பெயரை பயன்படுத்துகிறது என்ற விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.