வரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்!

0
79

வரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்!

சென்னையில் பல ஆண்டுகளாக சொத்து வரியை செலுத்தாமல் உள்ள உரிமையாளர்களின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இரண்டாம் அரையாண்டில் குறைவான அளவே வரி வசூல் ஆனதால் மாநகராட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது.

மாநகராட்சிகளில் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாக கருதப்படுவது சொத்துவரி மற்றும் தொழில் வரி. இதற்கிடையே மாநிலம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி மூலம் அரையாண்டுக்கு 700 கோடி வீதம் ஆண்டுக்கு 1400 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சொத்து வரி உயர்வு எதிர்த்து நீதிமன்றத்தில் பலர் மேல்முறையீடு செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை எடுத்து 2022 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை சுமார் 696. 97 கோடி ரூபாய் வரி வசூல் ஆனது.

இதனை அடுத்து இரண்டாம் அரையாண்டில் சொத்து வரியை செலுத்த பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இவர்களில் பலர் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பல ஆண்டுகளாக செலுத்தாமல் உள்ள நிலுவை வரி மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான சொத்து வரி ஆகியவற்றை செலுத்த மாநகராட்சி சார்பில் அவ்வப்போது நோட்டீஸ் அனுப்பி நினைவூட்டல் செய்த போதும் உரிமையாளர்கள் அதனை அலட்சியம் காட்டி நிராகரித்து வருவதால் இந்த ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரையாண்டும் முதல் 15 தேதிகளுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் அல்லது 5000 ரூபாய் ஊக்கத் தொகையும், நாள் கடந்து செலுத்துவோர்க்கு இரண்டு சதவீதம் தனிவட்டி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டதால் தனிவட்டி இல்லாமல் 2022 அக்டோபர் முதல் வரும் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது ஆனால் தற்போது வரை 120 கோடி வரையே வசூல் ஆனது.

மேலும் 5 லட்சம் முதல் 25 லட்சத்திற்கும் மேல் வரி பாக்கி என 66.37 கோடி வைத்திருந்த தனி நபர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் என 499 பேரின் பெயர் பட்டியல் சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision. என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத நபர்களின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் தயார் செய்துள்ளது.

அதில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு சொத்து வரி செலுத்தாத நபர்களின் வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் நிலங்களை ஜப்தி செய்து அவர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு ஏற்ப ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022- 2023 ஆம் ஆண்டில் மாநகராட்சியின் வருவாய் 800 கோடி என பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 120 கோடியே வசூலானதால் மாநகராட்சி இந்த அதிரடி ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.