சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. சிந்து நதியின் நீர் இனிமேல் பாகிஸ்தானுக்கு இல்லை எனவும் இந்தியா அறிவித்துவிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. ஏனெனில், இரண்டு நாடுகளும் எல்லைகளில் சண்டை போட துவங்கிவிட்டார்கள். ஒருபக்கம், பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
ஒருபக்கம், இந்தியாவில் வசிக்கும் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். இதில் கோபமடைந்துள்ள நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ‘பஹல்காமில் அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாக பேசுவது மிகவும் தவறு. நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்பவர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கே போய்விடுங்கள். இந்துக்களுக்கு என இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். இங்கு கூட நாங்கள் வெளியே செல்லக்கூடாது என்றால் எப்படி?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.