பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயல்! 72 பேர் உயிரிழப்பு

0
59

பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயல்! 72 பேர் உயிரிழப்பு

 

பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையானது 72 ஆக உயர்ந்துள்ளது.

 

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை அங்குள்ள மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன.

 

இந்த சூழலில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதன் எதிரொலியால் பிலிப்பைன்சை தாக்கும் புயல்கள் மேலும் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை ‘நால்கே’ என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று முன் தினம் தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பயங்கரமாக தாக்கியுள்ளது.

 

இந்த சக்தி வாய்ந்த புயலால் மணிக்கு பல கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் அங்குள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு அடித்து தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் செல்லும் வாகனங்கள் உருண்டன.

 

சக்தி வாய்ந்த இந்த புயலை தொடர்ந்து அங்கு பலத்த காற்றுடன் கனமழையும் பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளது. குடியிருப்பு பகுதிகளை இந்த வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. மலைப்பாங்கான சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன என்றும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இந்த புயல், மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பங்களில் 31 பேர் பலியானதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கையானது 72 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனைத் தொடர்ந்து அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. மேலும் முழு வீச்சில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்