PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் நன்றி மறந்து விட்டார் என பாமக வழக்கறிஞர் பாலு பேசியுள்ளார்.
பாமக சார்பில் வன்னியர் சங்கம் நடத்தும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையிலுள்ள திருவிடந்தையில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டு திடலில் சுமார் 2 லட்சம் நபர்களுக்கு மேல் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும் போதுமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் என அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் 5000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக் கணக்கான தொண்டர்கள் வந்த வண்ணமேயுள்ளனர். இதில் காவல்துறையினர் கெடுபிடியால் பல்வேறு வாகனங்கள் வழிமாற்றி திருப்பி விட்டதாக ஆளும் அரசு மீது பாமகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மாநாட்டில் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு திமுகவை விமர்சித்து பேசியுள்ளார். அதாவது கலைஞருக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் கொடுத்ததே பாமகவால் தான் என அவர் திமுகவை விமர்சித்துள்ளார். ஆனால் அவரின் மகன் ஸ்டாலின் அதை மறந்து பாமக வின் கோரிக்கையான வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை இழுத்தடித்து வருகிறார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மருத்துவர் ராமதாஸ் அளித்த சமூக நீதியின் அடையாளமான மஞ்சள் துண்டை அணிந்து கொண்டு தான் கருணாநிதி தமிழக அரசியலில் வலம் வந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அதையெல்லாம் மறந்து செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.