விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

0
136
#image_title

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

 

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் தற்போது நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் அதே ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்டவை தயாராகி வருகின்றன. அதே போல நாம் தமிழர் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது போல இந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் நான்கு முனை போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஒன்றிய அளவில் தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமித்து எதிர்க்கட்சிகளுக்கு திமுக தலைமை ஷாக் கொடுத்துள்ளது.

 

இந்நிலையில் திமுக,அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு தெரிந்துள்ள நிலையில் பாஜக கூட்டணியின் நிலைப்பாடு என்ன என தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இந்த இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் யார் போட்டியிடவுள்ளார்கள் என்பது குறித்து தமிழக அரசியலில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வட தமிழகத்தில் அமைந்துள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால் பாஜக கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடுமா? அல்லது கூட்டணி கட்சியான பாஜவுக்கு விட்டு கொடுக்குமா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.

 

அந்த வகையில் இது குறித்து முடிவு செய்ய பாமக தலைமை ஏற்பாடு செய்துள்ள சிறப்பு கூட்டம் இன்று தைலாபுரம் தோட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

 

இக்கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை பாமக புறக்கணித்த நிலையில் இந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்குமா? அல்லது கூட்டணி கட்சிக்கு விட்டு கொடுக்குமா? என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு கூட்டத்தின் முடிவில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.