PMK: பாமகவை உட்கட்சி மோதலுக்கு ஜிகே மணி தான் முக்கிய காரணம் என பாட்டாளி தொண்டர்கள் கூறி வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் இவருக்கு தலைவர் பதவியை கொடுத்திருந்தனர். பின்பு ராமதாஸ் அதை அன்புமணிக்கு கொடுத்துவிட்டு இவருக்கு கௌரவ தலைவர் என்ற பதவியை கொடுத்தார். தனக்கு தான் பதவி இல்லை தனது மகனுக்காவது பதவி வேண்டும் என்று ஜிகே மணி நின்றதால், இளைஞரணி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழ் குமரன் லைக்க ப்ரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் கட்சி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியவில்லை.
இதனால் தாமாகவே இளைஞரணி பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இப்படி இருக்கையில் அன்புமணி அந்த பதவிக்கு தனது ஆதரவாளரை கொண்டு வந்து நிறுத்த வேண்டுமென்று மனக்கணக்கு போட்டிருந்தார். ஆனால் அவர் நினைத்ததை ராமதாஸ் தவிடு பொடியாக்கி மகள் வழி பேரனான முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்தார். இவ்வாறு அவரை நியமிக்க சொல்லி ராமதாஸுக்கு அறிவுரை கொடுத்ததும் ஜிகே மணி தானாம். முகுந்தனை நியமிப்பதால் கட்சிக்குள் பனிப்போர் வெடித்தது. மேடையிலேயே இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டனர்.
கட்சிக்காக வேலை செய்தவர்களுக்கு பதவி வழங்காமல், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவதா என்ற கேள்வியை அன்புமணி எழுப்பினார். இது என் கட்சி நான் உருவாக்கியது, நான் என்ன சொல்கிறேனோ அதுதான் நடக்கும். பிடிக்காதவர்கள் வெளியேறி விடுங்கள் என காட்டமாக ராமதாஸ் தெரிவித்துவிட்டார். இப்படி அப்பா மகனுக்குள் சண்டையை மூட்டி விட்டு ஜிகே மணி வேடிக்கை பார்ப்பதாகவும் மறைமுக கூட்டணியில் திமுகவுடன் கைகோர்த்து இருப்பதாகவும் விவரம் தெரிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால் தான் சட்டசபையில் ஸ்டாலினை புகழ்ந்தும் பேசியுள்ளார்.
இவற்றையெல்லாம் அறிந்த பாமக நிர்வாகிகள் இவரை கட்சியை விட்டு நீக்குவதோடு முகுந்தனையும் நீக்குங்கள் என்று குரல் எழுப்பி வருகின்றனர். இவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொண்டாலே பாதி பிரச்சனை முடிந்து விடும் என கூறியுள்ளனர்.