PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே கட்சி மோதல் தீவிரமடைந்து காணப்பட்டது. இதனின் அடுத்த கட்டம் கட்சி இரண்டாக பிரிய போவதாக தகவல் வெளியானது. அதிலும் ராமதாஸ் நான் தான் இனி தலைவர் என கூறி ஒரு சில நிர்வாகிகளை நீக்கம் செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, உடனே பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட நான்தான் தலைவர் ராமதாஸ் அவர்கள் நீக்கியது செல்லாது என அறிவித்தார். இப்படியே இருவரும் கட்சிக்குள்ளேயே முரண்பட்டு செயல்படுவது நல்லதல்ல என எண்ணிய நிர்வாகிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
அதன் முதல் படியாக இன்று தைலபுர தோட்டத்தில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த இருவரின் சந்திப்பானது அப்பா மகனின் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முக்கிய மூன்று கட்டுப்பாடுகளை ராமதாஸ் விதித்துள்ளாராம். அதில் முதலாவதாக கட்சித் தலைவராக நான் தான் செயல்படுவேன் எனக் கூறியுள்ளாராம். மேற்கொண்டு கட்சியிலிருந்து தானாக விலகிக் கொண்ட மகள் வழி பேரனான முகுந்தனுக்கு மீண்டும் கட்சிக்குள் முக்கிய பொறுப்பு வழங்கப்படும்.
அதில் ஏதும் அன்புமணி தலையிடக்கூடாது. மேற்கொண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதையும் நான்தான் முடிவு செய்வேன் என கூறியுள்ளாராம். இதில் எதற்கும் அன்புமணி ஒத்து வரவில்லை என்றால் கட்சியிலிருந்து நீக்கம் செய்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அன்புமணி இந்த மூன்று ஒப்பந்தங்களுக்கும் சரி என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.