வெற்றி பெறும் குறும் படத்திற்கு ரூ.50000… பெண் குழந்தை விழிப்புணர்வு வீடியோ!!

Photo of author

By Gayathri

தற்சமயம் தமிழ்நாட்டில் அதிகமாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு அனைவரிடத்திலும் தொடர்ந்து கவலைக்கிடம் அளித்து வருகின்றது. பெண் குழந்தைகள் பிறந்தது முதலே அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பது முதல் அவர்களை படிக்க வைப்பது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு இன்றைய கால பெற்றோர்களின் நிலை பெரிதும் சவாலாக உள்ளது. குழந்தைகள் என்று பாராமல் பலரும் ஈனச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பெண் குழந்தைகளின் கூடுதல் பாதுகாப்பிற்காகவும், பிரச்சனை ஏற்பட்டால் கையாளும் முறை குறித்து விழிப்புணர்வு குறும்பட வீடியோ போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு குறும்பட போட்டியானது, பொதுமக்கள் பிரிவு, மாணவர்கள் பிரிவு என இரு பிரிவுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கப்பட உள்ளது. இரு பிரிவுகளுக்கும் தலா ஐம்பதாயிரம் பரிசு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.இளம்பகவத் மற்றும் சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இணைந்து வெளியிட்டிருந்தனர். இதற்காக முதல் பரிசாக இரு போட்டிகளுக்கும் தலா ரூ.25000 இரண்டாம் பரிசாக ரூ.15,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் பத்தாயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குறும்பட போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28, 2025. குறும்பட ஆவணங்களை சமர்ப்பிக்க மார்ச் 14 வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த குறும்படங்களுக்கு தமிழக அரசின் பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறப்பு விருது வழங்கப்படும் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது. https://lnxstgweb.tn.gov.in/tuty/sfc2024/ என்ற இணையதளத்தின் மூலம் இதன் விரிவான தகவல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.