கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் நடை இன்று திறப்பு!! பக்தர்கள் தரிசனத்திற்கு தடை..!

0
79

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை, குருவாயூர் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் தற்போது கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் தொடர்வதால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம். பிறகு 5 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். பிறகு இன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது என்பதால் கோவில் நடை இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படுகிறது.

நாளை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை மற்றும் உச்ச பூஜை நடைபெறும். பிறகு, காலை 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படும்.

வருகிற 21-ந் தேதி கோவிலில் ஆவணி மாத பூஜை நடைபெறும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

author avatar
Parthipan K