கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கவுரவ விரிவுரையாளர்களில் யுஜிசி நிர்ணயித்த கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழக அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் 50% தங்களுக்கு ஒதுக்க வேண்டும் அல்லது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்பட வேண்டும்.

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதனால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு போதிய அளவில் பயன் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் தகுதி மற்றும் திறமையில் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தேவையில்லை. கவுரவ விரிவுரையாளர்களில் யுஜிசி நிர்ணயித்த கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் அதில் கூறியுள்ளார்.

Leave a Comment