சுஷாந்த்: 15 கோடி பணப்பரிமாற்றம் தோழி ரியா மீது சுஷாந்த் தந்தை வழக்கு பதிவு?

0
70

 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பு மொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சி கடலில் ஆழ்த்தியது.. சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இவர் உயிரிழப்பு தொடர்பாக மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் நேற்று தன் வாக்குமூலத்தை அளித்து உள்ள நிலையில் சுமார் 4 மணி நேரம் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்த வாரத்துக்குள் கரண் ஜோஹரும் நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறபடுகிறது.

மேலும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என 30 – க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆகிய பின் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், தன் மகனை தற்கொலைக்கு தூண்டியது அவர் தோழி ரியா சக்ரபர்த்திதான் என அவர் மீது FIR மற்றும் தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில்,

” ரியா தன் மகனின் வங்கி கணக்கை கட்டுப்படுத்தி சுஷாந்த் கணக்கிலிருந்து தனது கணக்குக்கு ரூ.15 கோடி மாற்றியுள்ளார் எனவும் அவரது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி உள்ளார் எனவும் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் கம்பெனிகளின் பங்குகளை கையாண்டு உள்ளார் எனவும், சுஷாந்துக்கு மன அழுத்தத்தைப் பகிரங்கப்படுத்துவதாக தெரிவித்து மிரட்டியுள்ளார் எனவும் மேலும் அவரது சிகிச்சையின்போது அதிகப்படியான மருந்துகளை எடுக்க வைத்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். ரியா மீது சுஷாந்தின் தந்தை பதிவு செய்த FIR நகல் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இதை அறிந்த சுஷாந்தின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

author avatar
Kowsalya