Breaking News

மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு!!

Tamanna caught in a fraud case.. Police order to appear in person!!

மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு!!

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் காரணத்தால் தற்போது 17வது சீசன் வரை இந்த தொடர் வந்துள்ளது. இப்போது 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டவிரோதமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னா சிக்கியுள்ளார்.

அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் என்ற நிறுவனம் வாங்கி இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஜியோ சினிமா செயலில் வியாகாம் நிறுவனம் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்நிலையில், ஃபேர்பிளே என்ற சூதாட்ட செயலியில் ஐபிஎல் போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

தங்களிடம் உரிய அனுமதி பெறாமல் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு செய்வதாக சம்பந்தப்பட்ட செயலி மீது வியாகாம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே பலர் கைதாகியுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் நடிகை தமன்னாவும் சிக்கியுள்ளார். ஏனெனில் இந்த செயலியை விளம்பரப்படுத்திய காரணத்தால் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகை தமன்னாவிற்கு மும்பை சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த விளம்பரத்தில் நடித்த காரணத்திற்காக நடிகர் சல்மான் கானுக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதாக காரணம் கூறி நேரில் ஆஜராகவில்லை. தற்போது தமன்னா ஆஜராவாரா இல்லையா என்பது தெரியவில்லை.