இந்தியாவில் தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியல்; தேசிய குற்றவியல் காப்பகம் வெளியீடு!! தமிழகம் எத்தனாவது இடம்..?

0
48

இந்தியா முழுவதும் 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் சுமார் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 381 பேர் தற்கொலை செய்வதாக பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை அதற்கு முன்தைய ஆண்டுகளான 2018 (1,34,516) மற்றும் 2017 (1,29,887) ஒப்பிடும்போது சுமார் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 18,916 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 12,665 பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்திற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் 12,665, மத்திய பிரதேசதம் 12,457 மற்றும் கர்நாடகாவில் 11,288 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், குடும்பமாக தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் தற்கொலை அதிகம் நடக்கும் நகரங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் சென்னையில் 2,461 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதற்கு முன்தைய ஆண்டு 2018 (2,102) ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக டெல்லியில் 2,423, பெங்களுருவில் 1,081, மும்பையில் 1,229 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.சி.ஆர்.பி-யின் அறிக்கையின்படி 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட 100 பேரில் 70.2 ஆண்கள் என்றும், 29.8 பெண்கள் என்றும் என்.சி.ஆர்.பி சொல்லியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 68.4 சதவீதம் பேர் திருமணமானவர்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 சதவீதம் பேர் வீட்டில் இருக்கும் பெண்கள் என கூறியுள்ளனர்.

இந்திய அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K