கொரோனா நிவாரணம்! தஞ்சையில் மக்கள் அவதி!

0
72

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியடைந்தது. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் தினத்திலேயே நோய் தொற்று நிவாரண நிதியாக ஒவ்வொரு அரிசி அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், இதன் முதல் தவணையாக 2000 ரூபாய் கொடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.. அதன்படி முதல் தவணை பணம் வினியோகம் செய்ய தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வாங்குவதற்காக நான்கு மணி நேரமாக பொதுமக்கள் காத்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகத் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான நியாயவிலைக் கடைகளில் இன்று நோய்தொற்று நிவாரண நிதியை வினியோகம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதில் சட்டசபை உறுப்பினர் துரை சந்திரசேகர், சட்டசபை உறுப்பினர் நீலமேகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காலை 9 மணி அளவில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதற்கு முன்பாக அந்த இடத்திற்கு வந்து காத்திருக்க ஆரம்பித்தார்கள். ஆனால் 12 மணி ஆன பின்னரும் கூட சட்டசபை உறுப்பினர்கள் வருகை தரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன்பின்னர் சட்டசபை உறுப்பினர்கள் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பணத்தை வழங்கியிருக்கிறார்கள் இதனை பெறுவதற்கு நான்கு மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.