ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக நீதிமன்றம் வேதனை

0
175
Permanent Judges for Chennai High Court!! President's action order!!
Permanent Judges for Chennai High Court!! President's action order!!

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக நீதிமன்றம் வேதனை

ஓடும் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி இறங்குவது பேஷனாகிவிட்டதாக சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை செஷனாய் நகரை சேர்ந்த சசிகுமார் – ஷீலாராணி தம்பதியின் 14 வயதான மகன் ஆகாஷ் சேத்துப்பட்டில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2015 ஜூலை மாதம் மாநகர பேருந்தில் பயணித்த ஆகாஷ், அழகப்பா நகர் நிறுத்ததில் இருந்து, பேருந்து புறப்பட்டபோது கீழே இறங்க முயற்சித்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

மகனின் இறப்புக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிடக் கோரி, ஆகாஷின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி சந்திரசேகரன், அகாசின் மரணத்திற்கு இழப்பீடாக 10 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ததுடன், உயிரிழந்த ஆகாஷின் கவனக்குறைவிற்காக 50 சதவீத இழப்பீடு தொகையை கழித்தது போக, 5 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை அவரது பெற்றோருக்கு வழங்க மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கவனக்குறைவாக ஏறி, இறங்குவதால் இதுபோன்ற மரணங்கள் நிகழ்வதாகவும், மாநகர பேருந்தில் வாசற் கதவுகள் பொருத்தப்பட்டிருந்தால், இந்த மரணம் தடுக்கப்பட்டிருக்கும் என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஓடும் பேருந்தில் ஏறி, இறங்குவது மாணவர்கள் மத்தியில் பேஷனாக உள்ளதாகவும், அப்படிப்பட்ட மாணவர்களை ஓட்டுநர், நடத்துனர், பொதுமக்கள் எச்சரித்தாலும், இதுபோன்ற மரணங்கள் தொடர்வதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.