குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம்-சம்பவத்தால் சலசலப்பு!

Photo of author

By Savitha

குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சம்பவத்தால் சலசலப்பு.

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்க குழந்தையை புதைக்க சென்ற போது உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் நடத்தப்படும் கட்டால் சூப்பர் ஸ்பேஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 07 ம் தேதி பிறந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாக தெரிவித்த மருத்துவர்கள் குழந்தையை இன்குபேஷனில் வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் மாலை குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் குழந்தைக்கு இறப்புச் சான்றிதழை வழங்கினர்.

குழந்தையின் இறப்புச் செய்தியைக் கேட்க பெற்றோர் குழந்தையை புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தபோது குழந்தையின் உடலில் அசைவு தெரிந்ததோடு குழந்தை மூச்சு விடுவதும் தென்பட்டது.

இதனைத் தொடர்ந்து குழந்தையை மீண்டும் தூக்கிகொண்டு பெற்றோர் மருத்துவமனைக்கு சென்ற போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சற்று முன்னதாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக தனது குழந்தை கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக மருத்துவமனையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை உத்தரவிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை குழு ஒன்றையும் அமைத்துள்ளது.