எதிர் வரும் சட்டசபை தேர்தலில் நம்முடைய தலைமையில்தான் கூட்டணி! மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

0
189

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக 2021 விடையளிக்கும் 2022 வரவேற்போம் என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இருக்கின்ற அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தலைமை தாங்கினார் என்று சொல்லப்படுகிறது.

மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி இராமதாசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக இதில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது, தமிழகத்தில் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் முன்னேற்றம் என்பது தான் நம்முடைய லட்சியம் அந்த லட்சியத்தை வென்றெடுத்து வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசை அமைக்க வேண்டும்.

அதற்காக 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் தனி அணி அமைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் கூட்டணி அமைப்பது என்றால் அது நம்முடைய தலைமையில்தான் என்று தெரிவித்திருக்கிறார், பாட்டாளி மக்கள் கட்சியை ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரலாம், ஆனால் தலைமை தாங்குவது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்று தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தை நாம் ஆள வேண்டும் என்ற உந்துதல், முனைப்பு, வேகமும், விறுவிறுப்பும், சுறுசுறுப்பும், உங்களுக்கு வரவேண்டும். எதிர்வரும் நகராட்சி, பேரூராட்சி, தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் போட்டியிட வேண்டும் அதை யாருக்காவது விட்டுக் கொடுத்து விடுவோம் என்று யாராவது நினைத்தால் அவர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இதுவரையிலான தவறுகளை மன்னித்து இருக்கின்றோம், இனி தவறுகள் நடைபெற்றால் மன்னிக்க மாட்டோம், உங்கள் பதவி பறிபோகும் என்று கூறியிருக்கிறார். நம்மிடம் இருப்பது இளைஞர் சக்தி ஏழு கடலையும் கைக்குள் அடக்க இந்த சக்தி போதும் இந்த சக்தி பெருகி இலட்சக்கணக்கான வாக்குகளை பெற்று குறைந்தது 60 அல்லது 70 இடங்களை பெறுவதற்கான சக்தியை உண்டாக்கும். அதற்கான வழிமுறைகளை உங்களுக்கு நாங்கள் தெரிவித்திருக்கின்றோம் அதனை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர்கள் உள்ளிட்டோரை உளவுத்துறை கண்காணிக்கும் அவர்கள் உரிய பணிகளை செய்யாமல் வீட்டில் துவங்கினால் அவர்கள் தூங்கி விழிக்கும் முன் அவர்களது பதவி பறிக்கப்படும், உள்ளாட்சி, மாநகராட்சி, தேர்தலில் கூட்டணி என்று விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இனி யாருக்கும் வரவேண்டாம். அப்படிப்பட்ட நபர்கள் இனி நாம் கட்சியில் இருக்கக்கூடாது பாட்டாளி மக்கள் கட்சி என்றால் உழைப்பவர்கள் என்ற எண்ணம் வரவேண்டும் என கூறியிருக்கிறார்.

சமூக ஊடகங்கள், திண்ணைப் பிரச்சாரம், இரண்டையும் கையில் வைத்துக்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது என இந்தியாவில் இருக்கின்ற அனைத்து ஊடகங்களும் பேச வேண்டும். நாம் அதற்கு முன்மாதிரியாக இந்தியாவில் இருக்கின்ற கட்சிகள் அனைத்திற்கும் இருக்க வேண்டும். எல்லோருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ கே மூர்த்தி, வன்னியர் சங்க தலைவர் பூ.தா. அருள்மொழி, வழக்கறிஞர் பாலு, சட்டசபை உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், அருள், சதாசிவம், சிவக்குமார், உள்பட பலர் பங்கேற்றார்கள்.

Previous articleதயவுசெய்து இதில் தீவிரம் காட்டுங்கள்! முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!
Next articleபுதிய வகை நோய் தொற்று பரவல்! சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here