மாதவிலக்கால் மாணவியை வகுப்பறைக்கு அனுமதிக்காத பள்ளி நிர்வாகம்: வாசலில் தேர்வெழுதிய அதிர்ச்சி சம்பவம்

Photo of author

By Anand

மாதவிலக்கால் மாணவியை வகுப்பறைக்கு அனுமதிக்காத பள்ளி நிர்வாகம்: வாசலில் தேர்வெழுதிய அதிர்ச்சி சம்பவம்

Anand

The school administration did not allow the student to enter the classroom due to menstruation: the shocking incident of taking the exam at the door

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் செயல்படும் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்டபோது, பள்ளி நிர்வாகம் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்தது. இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவி, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்ட நிலையில், ஏப்ரல் 7ஆம் தேதி அறிவியல் மற்றும் ஏப்ரல் 9ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளை எழுத பள்ளிக்கு சென்றார். ஆனால், பள்ளி நிர்வாகம் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறை வாசலில் உள்ள படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்தது.

மாணவியின் தாய் மற்றும் உறவினர் ஒருவர், மாணவியை பார்க்க பள்ளிக்கு வந்தபோது, இந்த நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாணவியிடம் காரணம் கேட்டபோது, மாணவி பதிலளிக்க முடியாமல் இருந்தார். இந்த சம்பவத்தை உறவினர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

பின்னர், மாணவியின் தாய் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டபோது, “இங்கு அப்படித்தான் நடக்கும்; வேண்டுமென்றால் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், இனிமேல் இத்தகைய செயல்கள் நடைபெறக்கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.