அக்டோபர் 1 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..! முதல்வர் அறிவிப்பு!!

0
78

அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் திரையரங்குகளை திறக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், தற்போது போக்குவரத்து சேவை, தொழிற்சாலைகளுக்கு அனுமதி, சுற்றுலா தளங்களுக்கு அனுமதி போன்ற சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

ஆனால், திரையரங்குகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்து நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

https://twitter.com/MamataOfficial/status/1309873817276133376?s=20

“இயல்பு நிலைக்கு திரும்பும் நோக்கில், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள், நாடகங்கள், இசை, நடனம், மேஜிக் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை 50 அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இவற்றில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K