நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. அதில், கலந்துகொள்வதற்காக விஜய் கோவை வந்தார். எனவே, அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என தவேக கட்சியினர் மற்றும் அவரின் ரசிகர்கள் திரண்டனர். அவரை பர்க்க விமான நிலையத்தில் கூட்டம் கூடியது. பலரும் பொருட்களை தள்ளி செல்லும் டிராலிகள் மற்றும் தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்று கொண்டனர். இதனால், அவற்றில் பல சேதமடைந்தது. அதோடு, விமான நிலையமே களேபரமானது. விஜய் வந்த பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோது விஜய் ரசிகர்கள் பைக்கில் அவரை பின் தொடர்ந்தனர்.
அது நடந்து 2 நாட்களில் கொடைக்கானல் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போதும் அங்கே பெரும் கூட்டம் கூடியது. அதன்பின் அவர் கொடைக்கானல் சென்றபோதும் அங்கும் ரசிகர்கள் அதிகமாக கூடினார். எனவே, அவர்களைச் சந்தோஷப்படுத்த ரோட் ஷோட் நடத்தினார். விஜய்க்கு கூடும் கூட்டம் மற்ற அரசியல் கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரு விழாவில் பேசிய திருமாவளவன் ‘ ஏசி அறையில் இருந்து கொண்டு செய்யும் அரசியல் அல்ல விடுதலை சிறுத்தைகளின் அரசியல். வீட்டில் ஏசி, காரில் ஏசி. வீட்டில் இருந்து ரெஸ்டாரண்ட் போனால் அங்கேயும் ஏசி. கொஞ்சம் நேரம் வெளியே வந்து கையை காண்பித்துவிட்டு மீண்டும் ஏசியில் போய் அமர்ந்துகொள்வது. அதுவல்ல விடுதலை சிறுத்தைகள் அரசியல்’ என பேசியிருக்கிறார். அவர் விஜயின் பெயரை சொல்லவில்லை என்றாலும் அவரைத்தான் குறிப்பிட்டு பேசினார் என புரிந்துகொள்ள முடிகிறது.