கட்சியிலிருந்து நீக்கியதை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

கட்சியிலிருந்து நீக்கியதை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Sakthi

கடந்த 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதாவது அந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் நிரந்தரமாக நீக்கப்பட்டு பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அத்து மீறிய அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அதிரடியாக நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டதுடன் அவரிடமிருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக திருமங்கலம் சட்டசபை உறுப்பினர் ஆர் பி உதயகுமார் நியமனம் செய்யப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

அதிமுக சார்பாக நடைபெற்ற சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

இதற்கான கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் திரு அப்பாவு அவர்களிடம் எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடா ஆகிய எஸ் பி வேலுமணி வழங்கி இருக்கிறார்.