டிக் டாக்கால் ஏற்பட்ட விபரீதம் மனைவியை கொன்ற கணவன்?

0
85

டிக்டாக்கில் ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டதால் மனைவியை கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார் விடுதி அறை ஒன்றில், இளம்பெண்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 2 இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

பட்டப்பகலில் விடுதி அறையில் அரங்கேறிய இரட்டை படுகொலை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபர்கள் இருவர் விடுதி அறைக்குள் வருவது, அங்கிருந்து தப்பித்து ஓடுவது போன்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவானதை வைத்து அந்த இளைஞர்கள் யார் என்பதையும் அவர்களுக்கும் இளம் பெண்களுக்கும் என்ன தொடர்பு என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.

அதன்படி உயிரிழந்த பெண்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்களை தாக்கியது சயீப் மற்றும் குலாம் முஸ்தபா என்பதும் தெரியவந்தது.

சகோதரிகளான மனிஷாவும், மஞ்சுவும் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் மனிஷா ராய்ப்பூரில் தங்கி நர்சிங் படித்துவந்துள்ளார். அவருக்கு உதவியாக சகோதரி மஞ்சுவும் விடுதியில் தங்கி அவருக்கு உதவியாக இருந்துள்ளார். மேலும், சயீப்பும், மஞ்சுவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதும், மாமியார் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனிடையே ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நடித்த டிக்டாக் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மஞ்சு. ஏற்கெனவே மஞ்சு மீது ஆத்திரத்தில் இருந்த சயீப் அந்த வீடியோவைப் பார்த்து மேலும் கோபமடைந்துள்ளார். ஆத்திரத்தில் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக முஸ்தாபா எனும் நண்பரின் உதவியை நாடிய சயீப், தனது மனைவியை கொலை செய்தால் ரூ.7 லட்சம்  பணம் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சகோதரிகள் தங்கிருந்த விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் மோதல் வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சயீப்பும், முஸ்தாபாவும் அங்கிருந்த தோசை சுடும் தவா-வால் மஞ்சுவை அடித்தே கொலை செய்துள்ளனர். இதை தடுக்க வந்த மனிஷாவையும் அவர்கள் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்தக் இரட்டை படுகொலை சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தையே அதிரவைத்தது. 

இதனால் விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் விடுதிக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் சயீப்பையும், முஸ்தாபாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

author avatar
CineDesk