சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை திடீரென புரமோட் செய்தார்கள். அவரும் ஆட்டையெல்லாம் தூக்கி முதுகில் வைத்த படி போஸ் கொடுத்தார். யாருடா இவரு?.. எதுக்கு இதெல்லாம்?’ என பலரும் யோசித்து கொண்டிருந்த போதே தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
ஐபிஎஸ் வேலை பார்த்தவர்.. நன்றாக படித்தவர்.. இளம் அரசியல்வாதி. இவர் தமிழக முதல்வராக இருந்தால் தமிழகம் வளர்ச்சியடையும் என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு ஆளுநர் பதிவியை கொடுத்துவிட்டு அண்ணாமலைக்கு பாஜக தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பின் மிகவும் ஆக்டிவாக அரசியல் பேசினார் அண்ணாமலை. 2021 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வந்தார்.
ஆனால், அந்த தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதற்கு பாஜக கூட்டணியே காரணம். சிறுபான்மையினர் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என அதிமுக சொன்னது. இதனால் கோபமடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை மோசமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை இப்போதே துவங்கிவிட்டன. எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.
இனிமேல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணி அமைந்தால் நான் ராஜினாமா செய்வேன் என அப்போதே அறிவித்தார் அண்ணாமலை, இப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசிய அண்ணாமலை ‘எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். அதிமுகவுடன் கூட்டணை அமைந்தால் நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். அதில் மாற்றமே இல்லை. மாற்றி மாற்றி பேசும் அரசியல்வாதி நான் இல்லை. கூட்டணி பற்றி அமித்ஷா சொல்வதே உறுதியானது. எனக்கு கட்சியின் வளர்ச்சியே முக்கியம்’ என சொல்லியிருக்கிறார்.
சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை அதிமுகவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை சொன்னதோடு, அந்த கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்றே அவர் கூறியதாகவும், ஆனால், அதிமுகவுடன்தான் என அமித்ஷா சொல்லிவிட்டதால் அவர் அப்செட் ஆகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியெனில் நான் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை சொல்ல, அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு தமிழகத்தில் வேறொருவரை பாஜக தலைவராக போடலாம் என்கிற முடிவுக்கு அமித்ஷா வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறது டெல்லி வட்டாரம்..