கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப் பட்டிருந்த ஊரடங்கு காரணமாக சுமார் 65 நாட்களுக்கு மேலாக பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் (ஜூன் 1) பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தவிர்த்து மற்ற மண்டலங்களில் பேருந்து போக்குவரத்து இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்து.
இதனையடுத்து பேருந்து போக்குவரத்துகாக 8 மண்டலமாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டலம் 7 மற்றும் 8க்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மற்ற 6 மண்டலங்களில் பேருந்து போக்குவரத்து மண்டலங்களுக்கு இடையே மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது
37 மாவட்டங்களில் பிரிக்கப்பட்ட 8 மண்டலங்கள் விபரம்.
- கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
- நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
- தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
- காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
- சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
- மண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.
- மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.
- அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் (Stage carriers) இயக்க அனுமதிக்கப்படுகிறது.
- பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.
- அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.
- அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.
அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.