கிராம சபை கூட்டம் ரத்து! சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா..? அரசியல் தலைவர்கள் கண்டனம்!!

0
91

கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று இரவு திடீரென அறிவித்ததையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக். 2ம் தேதி உள்பட ஒரு சில முக்கிய தினங்களில் மட்டும் கிராம சபை கூட்டம் தமிழகத்தில் நடப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. இந்த கிராம சபை கூட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஆர்வத்துடன் நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்ததோடு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், விவாதிக்க வேண்டிய பொருள் குறித்த விபரங்களும் அனைத்தும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு நேற்று இரவு திடீரென ரத்து செய்து அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது பக்கத்தில்,
வேளாண் சட்டங்களை எதிர்த்து அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களே தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்ற அச்சத்தால் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், திமுக திட்டமிட்டபடி செயலாற்றும். ஊராட்சித் தலைவர்கள் மக்களைச் சந்தித்து அதிமுகவின் வஞ்சகத்தை எடுத்துரைப்பார்கள் என்று கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1311714458369060864?s=20

இவரைத் தொடர்ந்து நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன..? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா..? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா..?
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமாா..? நாளை எமதே! என்று கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/ikamalhaasan/status/1311725650328260608?s=20

இவர்களைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், கொரோனா காலத்தில் அரசியல் கட்சிகளின் செயற்குழு பொதுக்குழு கூட்டங்கள் உள்பட மற்ற அனைத்து கூட்டங்களும் நடக்கும் போது கிராம சபை கூட்டம் மட்டும் நடக்க தடை விதிப்பது ஏன்..? என்பது போன்ற கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

author avatar
Parthipan K