நாளை மஹாபரணி மரணபயம் நீங்க! இந்த தீபத்தை ஏற்றுங்கள்!

0
285

நாளை மஹாபரணி மரணபயம் நீங்க! இந்த தீபத்தை ஏற்றுங்கள்!

ஆண்டுதோறும் மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து எமதர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது.மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி மஹாபரணி என்றும், அஷ்டமி மத்யாஷ்டமி என்றும், திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது. மேலும் மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தானங்களை செய்வதால் 12 மாதங்களிலும் தானம் செய்த பலன் கிடைக்கும்.

மஹாபரணி என்பது மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது எமதர்மராஜனின் நட்சத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம் முன்னோர்களின் கர்மவினைக்கு ஏற்ப, எமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதி.

எமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் செய்வது மற்றும் எம தீபம் ஏற்றுவது போன்றவைகளை செய்தால் எமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம்.

எம தீபம் : மரணபயம் நம்மைவிட்டு அகலவும், துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் எமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.தட்சிணாயன புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மகாளய பட்சம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்வது மரபு. அவ்வாறு இக்காலத்தில் வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே உள்ளது.

எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். முடியாதவர்கள் சுவாமிக்கு விளக்கேற்றும் போது, தனியே ஓரு அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார் என்பது நம்பிக்கை. எம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது.எம தீபம் ஏற்றினால் திருமணத்தடைகள் விலகும். குடும்பம் விருத்தியாகும். அனைத்துவித தடைகளும் நீங்கும். எம தீபத்தை மகாளய பட்சத்தில் வரும் மஹாபரணி நாளிலும், தீபாவளி காலத்தில் வரும் திரயோதசி திதியிலும் ஏற்ற வேண்டும்.

 

author avatar
Parthipan K