கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்!  நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! 

0
157
#image_title

கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசல்!  நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! 

கோடை சீசனை முன்னிட்டு வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

உதகை – குன்னூர் – கோத்தகிரி சாலைகள் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண ஒரே நேரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் நகரில் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் ஒரு வழிப்பாதையை இன்று முதல் செயல்படுத்தியுள்ளது.

குறிப்பாக உதகையிலிருந்து கோவை – மேட்டுப்பாளையம் – ஈரோடு உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகவும், அதேபோல் சமவெளி பகுதியில் இருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் வழியாக உதகை வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நகரில் சேரிங்கிராஸ் மையப்பகுதியில் இருந்து இந்த ஒரு வழிப்பாதையை பயன்படுத்த போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரு வழி பாதையில் செல்கின்றன. மேலும் கன ரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் வரவும் தடை விதிக்கபட்டுள்ளது.

author avatar
Savitha