லட்சம் பேரை காவு வாங்கிய நாள்!! இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது.!

0
59

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் 75 ஆண்டுகள் முடிகின்றது.

1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் கடைசி கட்டத்தின் போது அனைத்து நாடுகளும் தங்கள் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்று பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தனர். அந்த நேரத்தில்தான் அமெரிக்கா தனது எதிரி நாடான ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6ஆம் தேதி மற்றும் நாகாசகியில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அடுத்தடுத்து அணுகுண்டுகளை வீசியது.

உலக வரலாற்றில் அனுகுண்டுகளை போரில் பயன்படுத்தியது அதுவே முதல்முறை. இந்த இரு அணுகுண்டு வீச்சினால் ஏற்பட்ட விளைவுகள் மிகப் பயங்கரமாக இருந்தன. குண்டுகள் வீசப்பட்ட 2 முதல் 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-1,66,000 மக்களும் நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்கள். உயிர் இழந்தவர்களிள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட அந்தந்த இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்ததாக அரசு அறிவித்தது.

ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் ‘லிட்டில்பாய்’ மற்றும் மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் ‘ஃபேட் மேன்’.

எனோலாகே என்ற விமானம் மூலம் “லிட்டில் பாய்” என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா நகரத்தின் நடுப்பகுதியில் வீசியது அமெரிக்க ராணுவம். அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான பால்டிப்பெட்ஸ் என்பவரின் தாயார் பெயர் தான் ‘எனோலாகே’.

அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்தில் 2,000 அடிகளுக்கு மேல் தீப்பிழம்புகள் தெறித்தன. 90,000 மக்கள் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தன. கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாயின. பிஞ்சு குழந்தை முதல் முதியோர் வரை பலர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட ஹிரோஷிமாவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இயலவில்லை. இந்த நிகழ்வு நடந்து பதினாறு மணி நேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கும் உலக அரங்கிற்கும் குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது.

நாகசாகி மீது வீசப்பட்ட “பேட்மேன்” அணுகுண்டு வெடித்தவுடன் பல ஆயிரம் அடி உயரத்திற்கு தீப்பிழம்பு உருவானது. மேகங்களாக உயரத்தில் அடர்த்தியான நச்சுக் கரும்புகை உருவெடுத்து உலவின.

இந்த குண்டுவீச்சு நடந்து 6-வது நாளில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இந்த அணுகுண்டு வீச்சுதான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.

ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசி பேரழிவை ஏற்படுத்தாதபட்சத்தில் இரண்டாம் உலகப் போர் மேலும் பல மாதங்கள் நீடித்து, இதைவிட அதிகமான மக்கள் இறந்திருப்பர் என்று அப்போது அமெரிக்கா குறிப்பிட்டது.

1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் விஷத்தன்மை காரணமாக தான் பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது தெரியவந்தது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை, கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலைப்பாடு பற்றிய பெரும் சர்ச்சை இன்றும் உலகெங்கும் தொடர்கின்றது.

author avatar
Parthipan K