வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டது… நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய வினியோகிஸ்தர்…

0
28

வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டது… நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய வினியோகிஸ்தர்…

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தினால் நஷ்டம் ஏற்பட்டது என்று விநியோகிஸ்தர் ஒருவர் நடிகர் விஜய் அவர்களுக்கு கடிதம் எழுதியது ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடப்பள்ளி இயக்கினார். வாரிசு படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷியாம், ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, சங்கீதா, மேகா ஸ்ரீகாந்த், ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராம், பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவறம் சார்பாக தில் ராஜு வாரிசு திரைப்படத்தை தயாரித்திருந்தார். மேலும் தமன் வாரிசு படத்திற்கு இசை அமைத்திருந்தார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாரிசு திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றபோதிலும் வாரிசு திரைப்படம் 310 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக விநியோகிஸ்தர் ஒருவர் நடிகர் விஜய் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரளம் மாநிலத்தில் வாரிசு திரைப்படத்தை அகஸ்டின் ராய் என்பவரும் விநியோகம் செய்துள்ளார். இந்நிலையில் அகஸ்டின் ராய் அவர்கள் வாரிசு திரைப்படம் மூலமாக நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக நடிகர் விஜய் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அகஸ்டின் ராய் எழுதியுள்ள கடிதத்தில் “வாரிசு திரைப்படத்தை விநியோகம் செய்ததால் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. வாரிசு படத்துக்கு நான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை நீங்கள்தான்(நடிகர் விஜய்) திரும்ப பெற்று தர வேண்டும். மேலும் தான் அளித்த தொகைக்கு ஜி.எஸ்.டி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விநியோகிப்பாளர் அகஸ்டின் ராய் எழுதிய கடிதம் ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.