இமயம் சரிந்தது! பிறந்த நாளிலேயே விடைபெற்றார் வீரபாண்டி ராஜா!

0
337

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் கடந்த இரண்டாயிரத்தி பதிமூன்றாம் ஆண்டு மரணம் அடைந்தார். இது சேலம் மாவட்ட திமுகவினர் இடையே மட்டுமில்லாமல் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

ஏனெனில் அந்த அளவிற்கு சேலம் மாவட்டத்தில் செல்வாக்குமிக்க ஒரு நபராக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் தலைமையே சேலம் மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கே என்ன செய்வது, என்ன செய்யக் கூடாது, என்பதை தீர்மானிப்பவர் இவராகத்தான் இருப்பார். அந்த அளவிற்கு சேலம் மாவட்டத்தில் ஆளுமைமிக்க ஒரு தலைவராக வலம் வந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவருடைய மரணம் ஒட்டுமொத்த சேலம் மாவட்டத்தையும் அசைத்துப் பார்த்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதோடு அவர் திமுகவைச் சார்ந்தவராக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி இடமும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களிடமும், மிகுந்த விசுவாசத்துடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை சேலம் மாவட்டத்தில் வன்னியர் சங்க மாநாடு நடைபெற்றபோது அந்த மாநாட்டிற்கு வீரபாண்டி ஆறுமுகம் வருகை தந்திருந்தார், இதனால் செய்தியாளர்கள் அவரிடம் நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்று விடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய போது அவர் அளித்த பதில் ஆச்சரியத்தை கொடுத்தது.

திமுக என்பது நான் இருக்கின்ற கட்சி, ஆனால் இந்த மாநாடு என்னுடைய சமூகம் சார்ந்த மாநாடு அதனால் இதில் நான் பங்கேற்கிறேன் ஆனால் கட்சி மறுக்கிறேன் என்பதற்கு இடமில்லை என கூறி அனைவரையும் வியக்க வைத்தவர் தான் வீரபாண்டி ஆறுமுகம்.

இந்த சூழ்நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வந்தார். அந்த கட்சியின் தலைமைக்கு சேலம் மாவட்டத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலையை தயங்காமல் எடுத்துக்கூறும் அதிரடியான செயல்பாடு கொண்டவர் வீரபாண்டி ராஜா.

இப்படியான சூழ்நிலையில், அவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின்னர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அப்போதும் கூட அவர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் வீரபாண்டி ராஜா தன்னுடைய 58வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் கட்சி அலுவலகத்தில் இருக்கின்ற தன்னுடைய தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு காரில் அமர்வதற்காக சென்றிருக்கின்றார்.

அந்த சமயத்தில் அவருக்கு திடீரென்று மயக்கம் உண்டாகி இருக்கிறது அப்போது அவருக்கு லோ பிபி காரணமாக, மயக்கம் ஏற்படுவதை அறிந்து கொண்ட ராஜாவின் நண்பர்கள் உடனடியாக அவரை காரில் ஏற்றிக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு வேகமாக சென்று இருக்கிறார்கள். ஆனால் அங்கு செல்வதற்குள் ராஜாவின் உயிர் பிரிந்துவிட்ட்து மாரடைப்பு உண்டாகி உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

வீரபாண்டி ராஜாவின் பிறந்த நாளுக்காக பல ஏற்பாடுகளை செய்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் இந்த இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியால் அவருடைய இல்லத்தின் முன்பு திரண்டு வருகிறார்கள். ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்தின் சுவடே இதுவரையில் சேலம் மாவட்டத்தில் மறையாத நிலையில், தற்போது அவருடைய மகனும் மரணம் அடைந்து இருப்பதால் சேலம் மாவட்டமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது.

Previous articleஐபிஎல் போட்டி! கல்கத்தாவை ஓரங்கட்டியது பஞ்சாப் அணி!
Next articleவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சாரத்தில் இறங்கிய ஓ.பி.எஸ் ! அதிமுகவினர் உற்சாகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here