வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்… இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…

0
31

 

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில் பாதை திட்டம்… இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…

 

சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை நடைபெற்று வரும் பறக்கும் இரயில் பாதை விரிவாக்க பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு பெற்று விடும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் இரயில்வே விரிவாக்கம் பணிகள் தொடர்பாக தெற்கு இரயில்வே அதிகாரிகள் “இந்த ஆண்டின் இறுதிக்குள் காரைக்கால் முதல் பேரளம் வரை உள்ள இரயில் பாதை திட்டமும், சின்ன சேலம் முதல் கள்ளக்குறிச்சி வரையிலான இரயில் பாதை திட்டமும் நிறைவு பெறும்.

 

மேலும் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் இரயில் சேவை விரிவாக்கப் பணியும், சென்னை கடற்கரை முதல் சென்னை எழும்பூர் வரை கூடுதலாக 4வது பிளாட்பார்ம் அமைக்கும் பணியும் நிறைவு பெறும்.

 

கடந்த ஜூலை மாதம் வரை இந்திய ரயில்வே பாதைகளில் இருக்கும் 102 ரயில்வே மேம்பாலங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பாலங்கள் அதற்கு முன்னர் சீரமைப்பட்டது.

 

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 128 இரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த பணி 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடும்.

 

அரோக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரை தற்பொழாது 110 கி.மீ வேகத்தில் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அது 130 கி.மீ வேகமாக அதிகரிக்கப்பட்டு இயக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.