TVK BJP: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை இவ்வளவு பரபரப்பாக உள்ளதற்கு காரணம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் கட்சி துவங்கியதே ஆகும். விஜய்யின் அரசியல் பிரவேசம் யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவை பெற்றது. ஆனால் தவெக சார்பில் நடந்த கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட 41 உயிரிழப்புகள் அவரின் அரசியல் வாழ்க்கையை கேள்வி குறியாக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக திமுக அரசு மீது தவெக குறை கூறுவதும், தவெக மீது திமுக தொண்டர்கள் குறை கூறுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி நபர் குழு அமைக்கப்பட்டது. மேலும் விஜய்யை கூட்டணியில் சேர்க்க துடிக்கும் பாஜக கரூர் சம்பவத்தை விசாரிப்பதற்காக 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் தமிழக அரசின் தனி நபர் குழுவில் நம்பிக்கை இல்லாத விஜய் தரப்பு சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அறிந்த விஜய் நீதி வெல்லும் என்று பதிவிட்டிருந்தார். இவ்வாறான நிலையில், சிபிஐ பாஜக கையில் உள்ளதால் விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், அவர் மீது வழக்கு பதியக்கூடும் என்ற கருத்து அரசியல் களத்தில் நிலவி வந்த சமயத்தில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரஷாந்த் ஒரு கருத்தை கூறியுள்ளார்.
விஜய் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் சிபிஐ விஜய் மீது கூட வழக்கு பதிவு செய்வார்கள். விஜய்யை விசாரணைக்கு உள்ளக்குவார்கள், புஸ்ஸி ஆனந்த், மதியழகன், நிர்மல் குமார் உள்ளிட்டோரை கைது செய்வார்கள் , விஜய்யை கைது செய்து திகார் சிறையில் கூட அடைப்பார்கள். விஜய் பாஜக கூட்டணிக்கு வந்து விட்டால் அவர் குற்றமற்றவர், இல்லையென்றால் துணை முதல்வர் பதவி கூட கொடுக்கலாம். இவையெல்லாம், விஜய்யின் முடிவை பொறுத்து தான் உள்ளது என்று அவர் கூறினார்.

