அடுத்து என்ன செய்யப் போகிறது டிஎன்பிஎஸ்சி?

0
209
#image_title

பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள டி.என்.பி.எஸ்.சி ஆணையம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக அடுத்து என்ன செய்யப் போகிறது என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டு அரசு பணியாளர் தேர்வாணையம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் ஏற்படுத்தப்பட்டதாகும். பல்வேறு ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிலைத்து நிற்கிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை இந்த தேர்வாணையம் மூலம் சில தேர்வு முறைகளின் படி நிரப்பப்பட்டு வருகிறது.

ஆனால் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளுக்கும் டிஎன்பிஎஸ்சி உள்ளாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு மிகப்பெரிய பூகம்பமாக வெடித்தது.

இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி ஆணையம் விரைந்து செயல்பட்டு எங்கு தவறு நடந்தது? குற்றவாளி யார்? என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து முறைகேடில் ஈடுபட்டவர்களை வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம் செய்தது.

இது தேர்வர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்றாலும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாலும் இரண்டு ஆண்டுகள் அரசுப் போட்டி தேர்வுகள் எதுவும் உரிய முறையில் அறிவிக்கப்பட்டது போல் நடத்த முடியவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு, போட்டித் தேர்வுகளை அறிவித்த டிஎன்பிஎஸ்சி ஆணையம், அறிவிக்கப்பட்ட தேதிகளில் தேர்வுகளை நடத்த முடியாமலும் தேர்வு முடிவுகளை உரிய காலத்தில் வெளியிடாமலும் காலம் தாழ்த்தி வந்தது, தேர்வர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

மேலும், டிஎன்பிஎஸ்சி ஆணையம், மிகவும் மந்த நிலையில் செயல்படுவதாக தேர்வுகள் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 8 மாதத்திற்கு பிறகு வெளியாகி உள்ளது. அந்த தேர்வு முடிவுகளும் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற தகவல் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சை கிளப்பியது. அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து, சட்டமன்றத்தில் கூட எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி கே.
பழனிசாமி அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கும், குளறுபடிகளுக்கும் அவ்வப்போது விளக்கமும் பதில்களும் டிஎன்பிஎஸ்சி ஆணையும் அளித்தாலும் தேர்வுகள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவை ஏற்புடையதாக இல்லை என
தேர்வர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி ஆணையம் சொன்னபடி இந்த மாதம் குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிடுமா என்று தேர்வர்கள் கேள்விகள் எழுப்பி உள்ளனர்..

மேலும், டி.என்.பி.எஸ்.சி ஆணையத்தின் அடுத்தடுத்து நடவடிக்கைகளை ஊடகமும் அரசியல் வட்டாரங்களும், தேர்வர்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha