பொங்கல் பரிசுக்கு வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழப்பு! இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிய அரசியல் கட்சிகள்

0
85
Young Guy Died when he standing to get pongal gift
Young Guy Died when he standing to get pongal gift

பொங்கல் பரிசுக்கு வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழப்பு! இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிய அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் தமிழக அரசு சார்பாக ரூ.1,000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது நேற்று தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு சார்பாக வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசை பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் இந்த இலவச பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை ஏழை மக்கள் மற்றவர்களை போலவே மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்புப் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் பணமும் இணைத்து வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 2.5 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனவரி 9 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரையில் இந்த இலவச பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து அரசு வழங்கும் இந்த இலவச பொங்கல் பரிசை பெற நேற்று காலை 9 மணி முதலே தமிழக மக்கள் ரேஷன் கடைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் மக்களிடம் கடை ஊழியர்கள் ரேஷன் கார்டு விவரங்களை முழுமையாக சரிபார்த்து அதன் பிறகு அவர்களுக்குப் பரிசு தொகுப்புகளை வழங்கி வந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் ஆணைக்குப்பம் நியாய விலை கடையிலும் தமிழக அரசு வழங்கும் இந்த இலவச பொங்கல் பரிசை பெற மக்கள் கூட்டம் அலை மோதியுள்ளது. அந்த கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நடராஜ் என்ற இளைஞரும் ரூ.1,000 பணத்துடன் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் அவர் இதற்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்த அந்த இளைஞர் நடராஜ் அங்கேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது பரிசு தொகுப்பு வாங்க வந்த அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மீண்டும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், மேலும் கூட்ட நெரிசலின் போது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுக்கு ஆலோசனை கூறும் மக்களிடம் நமது சார்பாக சில கேள்விகள் அரசு இலவசமாக வழங்கும் இந்த 1000 ரூபாய் பணம் மற்றும் அந்த பொங்கல் பரிசை கூட சம்பாதிக்க முடியாத நிலையிலா உள்ளீர்கள்? இல்லை அரசியல்வாதிகள் உங்களை அடிமைகளாக வைத்து கொள்ள கொடுக்கும் இந்த இலவசங்கள் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? மக்களின் மனநிலை மாறும் வரை இது போன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

author avatar
Ammasi Manickam