கேரளாவில் சோகம்! தெரு நாய்கள் கடித்து 12 வயது பெண் குழந்தை பரிதாப உயிரிழப்பு!

0
55

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மயிலபுரம் பகுதியைச் சார்ந்த 12 வயதுடைய அபிராமி என்ற சிறுமி கடந்த வாரம் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றபோது தெருவில் இருந்த திரு நாய்கள் கடித்திருக்கின்றன .இதில் அபிராமியின் கால், கை, கண், உள்ளிட்ட பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வெறி நாய் கடிக்கான 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அபிராமிக்கு உடல்நிலை திடீரென்று மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன், கோட்டையம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனாலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மூளையில் பரவிய வைரஸ்களால், சிறுமி உயிரிழந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தெரு நாய் கடித்து 12 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.