விபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு 

0
103

விபத்தில் சிக்கியவரை காப்பற்ற நினைப்பவர்கள் கவனத்துக்கு? இதை செய்ய தவறினால் 15 லட்சம் இழப்பீடு

விபத்தில் சிக்கியவரை அடையாளம் கண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் அனாதையாக இறக்கச் செய்ததற்காக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொக்கரவலசு கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த ஆறுமுகம், 2014ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் பெற்றோரை சந்திக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

வழக்கமாக, இரண்டு மூன்று நாட்களில் திரும்பும் அவர், வராததால் அவரது மனைவி முத்துலட்சுமி, கீரனூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அத்துடன் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீசிலும், கனியூர் போலீசிலும் விசாரித்த போது, ஆறுமுகம் பற்றி எந்த தகவலும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கணவரை தேடி வந்த நிலையில், 13 நாட்களுக்கு பின் கணவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் இருப்பதாக குடிமங்கலம் போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பின் அங்கு சென்று கணவர் உடலைப் பெற்றார் முத்துலட்சுமி.

கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்து உரிய நேரத்தில் தகவல் தெரிவித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியும் எனக் கூறி, அவரது மரணத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், கணவரின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க கோரியும் முத்துலட்சுமி 2017ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் பல நாட்கள் ஆறுமுகம் சுய நினைவுடன் இருந்திருக்கிறார். அவரை அடையாளம் தெரியாதவர் என சிகிச்சை அளித்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய காவல் துறையும் கடமை தவறியதால், ஆறுமுகம் அனாதையாக இறந்திருக்கிறார் என வேதனை தெரிவித்துள்ளார்.

ஆறுமுகத்தின் விவரங்களை தெரிந்து, மனைவிக்கு தகவல் தெரிவித்திருந்தால், அவர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்திருப்பார் அல்லது இறக்கும் தருவாயில் குடும்பத்தினர் அவர் அருகில் இருந்திருப்பார்கள். அடிப்படை உரிமையை மீறிய இச்செயலால், முத்துலட்சுமியின் குடும்பத்தினருக்கு பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதால், 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக, இந்த வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து உத்தரவு பிறப்பித்த நாள் வரைக்கும் 6 சதவீத வட்டியுடன் மூன்று மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தவறினால், இந்த உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன் இழப்பீட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட போலீசாரிடம் இருந்தும், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களிடம் இருந்தும் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.