கடனை திருப்பி செலுத்த 24 மாதம் அவகாசம்..!! SBI அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

கடனை திருப்பி செலுத்த 24 மாதம் அவகாசம்..!! SBI அறிவிப்பு!

Parthipan K

வீட்டு கடன் மற்றும் சில்லரை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கொடுத்துள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கொரோனா சூழலில் வங்கிக் கடன்களை அதிரடியாக வசூலிக்கக் கூடாது என்றும் தவணைகளை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

மேலும், ஆறு மாத காலத்திற்கு வங்கி தவணைகளை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த கால அவகாசம் இந்த மாதம் நிறைவடையும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வீட்டு கடன் மற்றும் சில்லரை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கொடுத்து அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் வேலை இழந்து வருவாய் இழந்துள்ளனர். அதனால் இந்த சிறப்பு திட்டத்தை RBI அறிவுறுத்தலின் பேரில் SBI செயல்படுத்துகிறது.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ. நிர்வாக இயக்குனர் சி.எஸ்.ஷெட்டி  கூறியபோது, கொரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்களின் வருவாய் குறைந்து வங்கிக்கு கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை உள்ளது. சிறுகடனுதவி பெற்று தொழில் செய்யக்கூடியவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுக் கடன் பெற்றவர்கள் மாத தவணை செலுத்த முடியாத நிலை உள்ளது.

அதனால், மேலும் 2 ஆண்டுகளுக்கு கடனை திரும்ப செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1 ஆம் தேதிக்கு முன் கடன் பெற்றவர்கள் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை கடன் தவணைகளை தாமதம் இன்றி செலுத்தியிருந்தால் இந்த கடன் சலுகையை பெற தகுதி பெற்றவர்கள். மேலும் கொரோனா ஊரடங்கால், ஏற்பட்ட வருவாய் இழப்புக்கான ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும் என்று கூறினார்.