22 பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு! பைக் மீது லாரி மோதி சிறுவன் பலியானதில் அதிரடி நடவடிக்கை! 

0
100

22 பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு! பைக் மீது லாரி மோதி சிறுவன் பலியானதில் அதிரடி நடவடிக்கை! 

17 வயது சிறுவன் ஒருவன் பைக் ஓட்டிச் சென்று லாரி மோதி பலியானதில் 22 பெற்றோர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் கடந்த 3ம் தேதி 11ம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் (17), தனது நண்பனுடன் பைக்கில் சென்றான். அவர்களின் பைக் சாலையின் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது பைக் பயங்கரமாக மோதியது. இதில் ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானான். அவனுடன் வந்த சிறுவன் படுகாயம் அடைந்தான். காசியாபாத் போலீசார் இந்த வழக்கு குறித்து பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் நேற்று அதிரடியாக நடவடிக்கையில் இறங்கினர். அவர்கள் மேற்கொண்ட சோதனையின் விளைவாக 18 வயது பூர்த்தி ஆகாத 22 சிறுவர்கள் பைக் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் பிடித்து வைத்ததோடு அவர்களை பைக் ஓட்ட அனுமதித்த அவர்களின் பெற்றோர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி விபத்தில் மரணமடைவதை தடுக்க இந்த நடவடிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.