குளிரால் உறைந்த பொதுமக்கள் ஒரே நாளில் 25 பேர் பலி! இந்தியாவில் துயரம்!

0
83

குளிரால் உறைந்த பொதுமக்கள் ஒரே நாளில் 25 பேர் பலி! இந்தியாவில் துயரம்!

தற்போது இந்தியாவில் பனிக்காலம் என்பதால் குளிர்வாட்டி வதைத்து வருகிறது. அதுவும் வட மாநிலங்களில் சில வாரங்களாக மிகவும் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் வீடில்லாமல் இருப்பவருக்கு நிரந்தரமாக தங்கும் இடமும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவை கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. டெல்லியில் அயா நகரில் வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸ் ஆகவும், சப்தர்ஜங் பகுதியில் 4 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது. இதேபோல் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் வெப்பநிலை உறைநிலை புள்ளிகளுக்கு அருகில் உள்ளது.

வானிலை மையத்தின் அறிக்கையில் உத்திரபிரதேசம்,  ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், மற்றும் டெல்லி பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடும் குளிர் நிலவும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவும் எனவும் எச்சரிக்கை அளிக்கப்பட்டது.

உத்திர பிரதேசத்தில் நொய்டா, கான்பூர், காஜியாபாத், அயோத்தி, லக்னோ, பரேலி, மற்றும் மொராதாபாத்  ஆகிய பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதிகளில் குறைவான வெப்பநிலையை பதிவாகியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் நாள்தோறும் அதிகரித்து வரும் கடும் குளிரால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் மருத்துவ உதவி கிடைக்கும் முன்பே உயிரிழந்து விட்டனர். கடுமையான குளிரின் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும், ரத்தம் உறைவதாலும், மூளை மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு பக்கவாதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கான்பூரில் உள்ள இதய சிகிச்சை துறையின் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட தகவலில் வியாழக்கிழமை மட்டும் 723 இதய நோயாளிகள், அவசர சிகிச்சை மற்றும் புற நோயாளிகள் பிரிவுக்கு வந்துள்ளனர்.  இவர்களில் 41 பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர். 15 பேர்  இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டனர். என அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லக்னோ நகரில் உள்ள கிங் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் கூறுகையில்,  மாரடைப்பு இந்த குளிர்காலத்தில் வயதானவர்களுக்கு மட்டும் வரும் என கருதக் கூடாது.  வயது வித்தியாசம் இல்லாமல் மாரடைப்புக்கு உள்ளான சிறுவர்களும் சிகிச்சைக்கு வந்துள்ளன. எனவே  அனைவரும் பாதுகாப்புடன் இருக்கவும். முடிந்தவரை அனைவரும் வீட்டினில் இருப்பது நலம் என தெரிவித்துள்ளார்.