தேனி மாவட்ட விவசாயிகளே! பிரதமரின் நிதியுதவி கிடைக்கவில்லையா? – இதனை ஒருமுறை சரிபாருங்கள்!
PM-KISAN பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு வழங்கும் ரூ 2,000 நிதி உதவி 12 வது தவணை கிடைக்க நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2,000 வீதம் ஆண்டிற்கு ரூ 6,000 வழங்கி வருகிறது.
இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணை தொகைகள் வரப்பெற்றுள்ளன. தற்போது 12- வது தவணைத் தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது திட்டப் பயனாளிகளின் நில ஆவணங்கள், தமிழ்நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.
எனவே இத்திட்டத்தில் நிதியுதவி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை (பட்டா) அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காண்பித்து, சரி செய்து கொண்டால் மட்டுமே அடுத்த தவணைத் தொகை கிடைக்கப்பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.