காங்கிரசாரின் நாடகம் எடுபடாது; குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக எடியூரப்பா கருத்து

0
204

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மங்களூருவில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சிறுபான்மையின மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் இந்த பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது. பெங்களூரு சிவாஜிநகரில் குடியுரிமை திருத்த சட்ட விழிப்புணர்வு பிரசாரம் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது “காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜமீர்அகமதுகான், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் ஆவணங்களை தாக்கல் செய்யட்டும் என்று கேட்டுள்ளார். ஜமீர்அகமதுகான் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். வாய்க்கு வந்தபடி பேசுவது சரியல்ல. எதிர்ப்பவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கு அநீதி ஏற்படும் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த சட்டம் அமலுக்கு வருவதால், நமது நாட்டின் எந்த குடிமகனுக்கும் பாதிப்பு இல்லை என்று பிரதமரே  கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இந்த விஷயத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்து, கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை தூண்டிவிடும் வேலையை செய்கிறார்கள்.

மத்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றும்  நமது  நாட்டில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை  ஆதரவுடன்  நிறைவேற்றப்பட்ட  சட்டத்தை எந்த மாநிலமும் நிராகரிக்க முடியாது. நமது  நாட்டின்  உண்மையான குடிமக்களுக்கு எள் அளவு கூட பாதிப்பு இல்லை.. முஸ்லிம் ஓட்டுகள் சென்றுவிடுமோ என்ற பயத்தில் காங்கிரஸ் கட்சியினர் முஸ்லிம் மக்களை திசை திருப்புகிறார்கள். இனி காங்கிரசாரின் நாடகம் எடுபடாது.

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகிேயாரது ஆட்சி காலத்திலும் குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டது. அப்போது எந்த பிரச்சினையும் உண்டாகவில்லை. இப்போது பிரதமர் மோடி ஆட்சியில் மட்டும் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்?. காங்கிரஸ் கட்சியின் தவறான பிரசாரத்தை தடுக்கவே, முஸ்லிம் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் 3 கோடி பேருக்கும், கர்நாடகத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய உள்ளோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. முஸ்லிம் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தவே உண்மையை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்” என்று எடியூரப்பா தெரிவித்தார்.

Previous articleஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்?
Next articleதிருமாவளவன் பெயரை சொல்லி போலீசார் மீது கல்வீசி தாக்குதல்! விசிக பிரமுகரின்‌ அராஜகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here