பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!!

0
230
#image_title

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட செங்ஙனூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்குச் சென்றார். அவரிடம் மருத்துவர் விசாரித்த போது தனக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் கழிவறையில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது பேச்சில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மருத்துவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் பத்தணந்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட ஆறான்முளா பகுதியில் உள்ள அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது வீட்டிற்குள் அந்த குழந்தை பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையை மீட்டு பார்த்த போது உடலில் அசைவு தெரிந்த நிலையில், ஆச்சரியமடைந்த போலீசார் பக்கெட்டுடன் குழந்தையை தூக்கியபடி மருத்துவமனைக்கு ஓடினர்.

மின்னல் வேகத்தில் விரைந்து சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் இதனால், அதிர்ஷ்டவசமாக குழந்தையின் உயிர் பாதுகாக்கப்பட்டது.

பின்னர், அந்த பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இளம்பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும். இந்நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக கர்ப்பமானதால் ஊராருக்கு தெரிந்தால் அவமானம் என கருதி பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே பிரசவித்து குழந்தையை வெளியே தெரியாமல் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.