நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு சொந்த நிலங்கள் வாங்குவதற்கு நல் வாய்ப்பு ஒன்றினை தமிழக அரசு புதிய திட்டத்தின் மூலம் வழங்குகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
அதன்படி, மகளிர் உரிமை தொகை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கான உதவித்தொகை விதவை உதவித்தொகை என பல்வேறு வகைகளில் பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது. நிலம் இருப்பவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் நிலையில் நிலம் கூட வாங்க இயலாதவர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
நிலம் இல்லாத ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு உதவிடும் வகையில் தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்பட்டு அதன் மூலம் நிலங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது. நிலம் வாங்க நினைக்கும் ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கடனுதவி அல்லது வாங்கக்கூடிய நிலத்தில் 50 சதவிகித மானியம் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பட நினைக்கும் மற்றும் பயன்பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் இரண்டுமே 100% வரை இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு கூடவே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 6% வரை வட்டியுடன் கடன் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் அவர்களுடைய சொந்த மாவட்டத்தில் உள்ள தாட்கோ மேலாளர் அவர்களை அணுகி உதவி பெறலாம் என்றும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிக்க முடியாதவர்கள் தாட்கோ அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.