1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? – அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

0
9

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தின் மீது எழுப்பிய ஆயிரம் கோடி முறைகேடு குறித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பெயர்களில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகள் மத்திய அரசிற்கு விருப்பமில்லாததால், அமலாக்கத்துறையை பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளது என்று கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து, “டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக தோற்றம் ஏற்படுத்த முயற்சி செய்யப்படுகிறது. ஆனால், டெண்டர் வழங்கும் முறை வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது. எந்த முறைகேடும் இடம் பெறவில்லை. ஆயிரம் கோடி முறைகேடு குறித்து அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. இது வெறும் அரசியல் நோக்கத்தில் செய்யப்பட்ட குற்றச்சாட்டாகும்” என்று கூறினார்.

“மக்களும் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ள தமிழக அரசு தயார். டாஸ்மாக் நிறுவனத்தில் முறையாக செயல்படும் முறையை மத்திய அரசு பொருட்படுத்தாமல், தவறான தகவல்களை பரப்புகிறது. எதிர்க்கட்சித் தலைவர் முறைகேடு குறித்து அவ்வப்போது வித்தியாசமான எண்ணிக்கைகளை கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்,” என்றார்.

“பட்ஜெட்டில் தமிழக மக்கள் பயன்பெறும் திட்டங்களை அறிவிக்கவுள்ள நிலையில், அதனை மறைக்க மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதனால் உண்மை வெளிவராது என்பதே அவர்களின் எண்ணம். ஆனால், தமிழக அரசு நியாயமான வழியில் சட்டத்தின்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் நலத்திற்காக தொடர்ந்து செயல்படும்,” என்று செந்தில் பாலாஜி தனது பேட்டியை முடித்தார்.

Previous articleரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்: தங்கம் தென்னரசு ஆவேசம்!
Next articleவீண் செலவுகள் செய்வதில் முதலிடம் வகிக்கும் ஐந்து ராசிகள்..!! யார் யார் என்று தெரியுமா..??